தபால்துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணங்கள் என்ன? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தபால் துறைத்தேர்வு தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் குறித்து உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க தபால்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ எழிலரசன் தாக்கல் செய்த மனுவில், தபால் துறையின் சார்பில், தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டன. மாநில மொழியான தமிழில் நடத்தப்படவில்லை.
எனவே, இந்தத் தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இனிவரும் காலங்களில் மத்திய அரசு நடத்தும் தபால்துறைத் தேர்வில் தமிழ் மொழி, தேர்வு மொழியாக இடம்பெறுமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தபால் துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த அறிக்கைகளைப் படித்த நீதிபதிகள், இந்தத் தேர்வு தொடர்பான பணிகளுக்கு பிராந்திய மொழியறிவு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், அனைத்து தபால் துறைத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேர்வுக்கான நடைமுறைகள் குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் துறைத் தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்களை, உரிய ஆவணங்களுடன் பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.