கொடைக்கானல் தாண்டிக்குடியில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், பயணிகளை கவரவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.
கொடைக்கானலுக்கு ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இயற்கையின் கொடையாக விளங்கும் கொடைக்கானல் மலைப்பகுதி வண்ணத்துப் பூச்சிகளின் (பட்டாம்பூச்சி) வாழ்விடமாகவும் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மயிலாடும்பாறை, மன்னவனுார், தாண்டிக்குடி, அடுக்கம், பேரிஜம், பேத்துப்பாறை பகுதியில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன.
சவுத்தன் பர்ட்விங்க், ரெட்ஹெலன், புளூ மார்மோன், பாரிஸ்பீகாக், நீலகிரி டைகர், பெயின்டட் லேடி, பிளாக் பிரின்ஸ், பழநி புஷ்பிரவுன், பழநி போர்ரிங், தமிழ்மறவன் உட்பட 180 வகையான பட்டாம்பூச்சிகள் வனத்துறை மற்றும் பட்டாம்பூச்சி ஆர்வலர்களால் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
அதில் தமிழ் மறவன் (தமிழ் இயோமேன்) எனும் பட்டாம்பூச்சியை தமிழக அரசு மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்துள்ளது. இந்த வகை பட்டாம்பூச்சி மிகவும் அரிதானது. இதை வத்தலகுண்டு-கொடைக்கானல் செல்லும் காட்ரோட்டிலிருந்தும், பழநி-கொடைக்கானல் செல்லும் மலையடிவாரப் பகுதிகளிலும் பார்க்கலாம்.