தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர்
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் 168ஆவது பிறந்த நாள் 2022 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது
உ.வே. சாமிநாதையர் அவர்கள், அரிய பல தமிழ்ச் சுவடிகளைத் திரட்டியும் தொகுத்தும் தமிழுலகிற்குத் தந்து அருந்தமிழ்த் தொண்டாற்றியவர்.
இவர் மட்டும் இப்பணியைச் செய்யாமல் போயிருந்தால் எத்தனையோ அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானுக்கு இரையாகியிருக்கும், காலப்போக்கில் மறைந்து போயிருக்கும் செம்மொழித் தமிழின் கருவூலங்கள் ஓலைச் சுவடிப் புதையலிலிருந்து அச்சு வடிவில் பதிப்பித்தளித்தவர்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை ஆகிய சங்க இலக்கிய நூல்களுள் பலவற்றையும், தமிழ் விடுதூது போன்ற வேறு பல அரிய தமிழ் நூல்களையும் அச்சு வடிவில் எதிர்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சென்றவர்.
இவ்வாறு தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பிழைகளைத் திருத்தி, உரைக் குறிப்பு அளித்து, அச்சிட்டு, நூல்களாகக் கொணர்ந்து தமிழுக்கு வளம் சேர்த்த இத்தமிழறிஞரின் பணி தமிழ் உலகில் என்றென்றும் நிலைத்து போற்றுதற்குரியதாகும். மேலும் இவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.