பணச் சலவைத் தடுப்புச் சட்டம்
பணச் சலவை: தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை முறையான வழிகளில் ஈட்டப்பட்ட பணமாக மாற்றுவதே பணச் சலவை (Money Laundering) எனப்படுகிறது.
இது பண மோசடி / நிதி மோசடி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணம் என்னும் கறையை நீக்கும் முயற்சி என்பதால், சலவை (laundering) என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவான வழிமுறைகள்: பணச் சலவை நடவடிக்கை பொதுவாக மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. 1. சட்டவிரோதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி அமைப்புக்குள் செலுத்துதல்.
2. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி செலுத்தப்பட்ட பணத்துக்கான ஆதாரத்தை (Source) மறைப்பது. இதன் மூலம் அந்தப் பணத்தின் மீதான ‘கறை’ நீக்கப்படுகிறது
3. இப்படிக் கறை நீக்கப்பட்ட பணத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது, புழக்கத்தில் விடுவது. இது பொதுவான வழிமுறை மட்டுமே. சில பணச் சலவை நடவடிக்கைகளில் இந்த மூன்று கட்டங்களும் வரிசைப்படி நடக்க வேண்டியதில்லை. இரண்டு கட்டங்கள் இணைக்கப்படலாம். ஏதேனும் ஒன்றோ அனைத்துக் கட்டங்களுமோ தொடர்ந்து பல முறை நடக்க வேண்டியிருக்கலாம்.
பணத்தின் சட்டவிரோத ஆதாரத்தை (Illegal Source) மறைப்பதற்குப் பல வழிமுறைகளும் தந்திரங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சட்டவிரோத வழியில் ஈட்டப்பட்ட பணத்தையும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் தொழிலிலிருந்து ஈட்டிய வருவாயாகக் கணக்குக் காண்பிப்பது ஒரு வழிமுறை.
கணக்கில் காண்பிக்க முடியாத பணத்தைச் சிறு தொகைகளாகப் பிரித்து, பிறரிடம் கொடுத்துத் தன் வங்கிக் கணக்கில் செலுத்தவைத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை முறைப்படியான வருவாயாகக் கணக்குக் காண்பிப்பது இன்னொரு வழிமுறை. ரியல் எஸ்டேட், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வது, டிஜிட்டல் பணப் பரிமாற்றம், கிரிப்டோ நாணயங்கள், இணையவழி விளையாட்டுகள், சூதாட்டம் ஆகியவற்றின் வழியாகவும் பணச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
DAILY CURRENT AFFAIRS
உலகளாவிய தடுப்பு நடவடிக்கைகள்: தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் உலகத்தையே பாதிக்கும் பெரும் பிரச்சினைகள். பணச் சலவை வழிமுறைகள் காரணமாக இதுபோன்ற குற்றச் செயல்களின் மூலம் பணம் ஈட்டுவது குறித்த அச்சம் குறைக்கப்படுகிறது.
பணத்துக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாகிறது. குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்டு, சலவை செய்யப்பட்ட பணம் மீண்டும் அந்தக் குற்றச் செயல்களுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இதனால் நாடுகளின் பொருளாதாரம் சீரழிகிறது, குற்றங்கள் அதிகரிக்கின்றன.
1980-களின் மத்தியில் பணச் சலவையைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளின் தேவை உணரப்பட்டது. 1988இல் வியன்னாவில் நடைபெற்ற ‘போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான’ ஐ.நா. மாநாட்டில் போதைப் பொருள் வணிகத்திலிருந்து ஈட்டப்பட்ட பணத்தைச் சலவை செய்வதற்கான வழிமுறைகளைத் தடைசெய்வதற்கு உலக நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டது.
1989இல் பாரிஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பணச் சலவையைத் தடுப்பதற்காக ‘ஃபினான்ஷியல் ஆக்ஷன் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2000இல் நாடுகளைக் கடந்த அமைப்பாக்கப்பட்ட குற்றங்களுக்கு (Transnational Organized Crimes) எதிரான ஐ.நா. மாநாடு, பணச் சலவையைக் குற்றமாக்கும் சட்டங்கள் தேவை என்பதை வலியுறுத்தியது.
இது தவிர, பல சர்வதேச உடன்படிக்கைகள், நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைகள் பணச் சலவையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பணச் சலவையைத் தடுப்பதை சர்வதேசக் கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளன.
சட்டமும் திருத்தங்களும்: பணச் சலவைத் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) இந்தியாவில் 2002இல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள் பிறப்பிக்கப்பட்டு 2005இல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரம் அமலாக்க இயக்குநரகத்துக்கு (Enforcement Directorate) வழங்கப்பட்டுள்ளது.
பணச் சலவையைத் தடுப்பதற்கும் பணச் சலவையில் ஈடுபடுவோருக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் இந்தச் சட்டத்தில் போதுமான அதிகாரங்கள் இல்லை என்று உணரப்பட்டது. எனவே, சட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலான சட்டத் திருத்தங்கள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்ப்பும் தீர்ப்பும்: பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களின் மூலம் அமலாக்க இயக்குநரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சில அதிகாரங்கள் அரசமைப்புக்கு எதிரானவைஎன்று குற்றம்சாட்டப்படுகிறது. பணச் சலவை குற்றம்சாட்டப்பட்டவர்களின் வளாகங்களில் எப்போது வேண்டுமானாலும் தேடுதல் நடத்துவதற்கும் ஆவணங்களைப் பறிமுதல் செய்வதற்கும் சொத்துகளை முடக்குவதற்கும் தனிநபர்களைக் கைதுசெய்வதற்கும் அமலாக்க இயக்குநரகத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், விசாரணையின்போது யாரை வேண்டுமானாலும் அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்துக்குரிய அதிகாரம், அமலாக்க இயக்குநரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொய்யாக வாக்குமூலம் அளித்தது தெரியவந்தால், சட்டப்படி தண்டிக்கவும் வழிசெய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கான உரிமையை இது மீறுவதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
மேலும், பணச் சலவைக் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்படுவதற்கு எதிரான முன்ஜாமீன் நிபந்தனைகளும் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கான நிபந்தனைகளும் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளன. அரசியல்ரீதியான பழிவாங்கல் உள்ளிட்ட காரணங்களுக்காகக் குற்றம் செய்யாதவர்கள் இந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டால் குற்ற விசாரணையே தண்டனையைப் போல் ஆகிவிட இந்தச் சட்டத் திருத்தங்கள் வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் அமலாக்க இயக்குநரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 240-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஜூலை 27 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அமலாக்க இயக்குநரகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவும் அரசமைப்பின்படி செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
எதிர்ப்பாளர்களால் அஞ்சப்படும் விளைவுகளைத் தடுப்பதற்குச் சட்டத்திலேயே உரிய ஏற்பாடுகள் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதோடு, பணச் சலவை என்பது தீவிரவாதத்துக்கு இணையான கொடிய குற்றம் என்றும் அதைத் தடுப்பதற்கு வலுவான அதிகாரங்கள் கொண்ட சட்டங்களும் அமைப்புகளும் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இடமளிக்காமல் பண மசோதா வழியாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான வழக்கு மட்டும் பண மசோதாக்கள் தொடர்பான கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.