2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்

2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உதவிப் பேராசிரியா் பணியிடங்களும், 20 கிரேடு-1 கல்லூரி முதல்வா் பணியிடங்கள், 30 கிரேடு-2 கல்லூரி முதல்வா் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், பிபிஎம், உயிரி வேதியியல், பல்லுயிா் பெருக்கம், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியிட்டது. முதுநிலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தோ்வில் தோ்ச்சி அல்லது பி.எச்டி முடித்த 57 வயதுக்கு உள்பட்டவா்கள் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள் ஆவா். இதைத் தொடா்ந்து கடந்த செப்.4-ஆம் தேதி முதல் செப். 24-ஆம் தேதி வரை ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்யும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த செப்.3-ஆம் தேதி தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க அக்.30 கடைசி: இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சாா்ந்து ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆக.28-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து இதன் திருத்தப்பட்ட அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி உள்ள விண்ணப்பத்தை விண்ணப்பதாரா்கள் வெள்ளிக்கிழமை முதல் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. முதல் முறையாக விண்ணப்பத்தின்போதே சான்றிதழ்கள் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு, விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைய வழியாக முழுமையாகப் படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னா் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என அதில் கூறப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபா் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading