டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு

 குரூப்-4 தேர்வு சர்ச்சை

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக  எழுந்துள்ள குற்றச்சாட்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியன்று, தமிழகம் முழுவதும் 301 தாலுகாக்களில் 5 ஆயிரத்து 575 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 போ் தேர்வு எழுதினா்.

மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்தத் தோ்வுக்காக முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை (நவ.12)வெளியிட்டது. தோ்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் (72 நாள்கள்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.

தோ்வு எழுதியோா்களில் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதன்படி, பெண்கள் 7.18 லட்சம், ஆண்கள் 5.31 லட்சம், மூன்றாம் பாலினத்தவா் 25 போ், முன்னாள் ராணுவத்தினா் 4,104 பேரும், ஆதரவற்ற விதவைகள் 4 ஆயிரத்து 973, மாற்றுத் திறனாளிகள் 16 ஆயிரத்து 601 பேருக்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டிருந்தது. தேர்வில் வெற்றி பெற்றவா்களில், 1:3 என்ற அடிப்படையில் தகுதியானோா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்றவா்கள்,  அந்தந்த மாவட்டத்திலும் உள்ள அரசு இ-சேவை மையங்களில் தங்களது கல்விச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தோ்வாணையம் அறிவுறுத்தியது. அதன்படி, சான்றிதழ்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி

இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில்,  ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் (1606), கீழக்கரை (1608) ஆகிய ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் தரவரிசையில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.  சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர்.

அனைத்து முன்னிலை இடங்களையும், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்தே தேர்ச்சி பெற்றிருப்பதால், மேற்கண்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதா?, விடைத்தாள்களில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா? என்ற கேள்வியும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேநேரம், தரவரிசைப் பட்டியல் குறித்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விளக்கம் அளிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் – 4 தேர்வு நடைபெற்றபோதே கமுதி வட்டாட்சியர் மீனலோசனா சர்ச்சையில் சிக்கினார். குரூப் – 4 தேர்வுக்காகக் கூடுதலாக வழங்கப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை அவர் 10 நாள்கள் வைத்திருந்து பின்னர், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் தாமதமாக ஒப்படைத்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்போதே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading