500 இளநிலை உதவியாளர் பணிக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு
மதுக் கடைகளில் பணிபுரிவோரில், 500 பேருக்கு, இளநிலை உதவியாளர் வேலை வழங்குவதற்கான எழுத்து தேர்வை, ‘டாஸ்மாக்’ நிறுவனம், ஆகஸ்டில் நடத்த உள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம் நடத்தும், 5,200 மதுக் கடைகளில், 26 ஆயிரம் ஊழியர்கள், தொகுப்பூதிய முறையில் பணிபுரிகின்றனர். இவர்களில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேருக்கு, டாஸ்மாக் நிர்வாகத்தில், இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, 2018 ஆகஸ்டில் வெளியானது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், தேர்வுக்கு தடை விதித்தது. பின், நடந்த விசாரணையில், தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மார்ச் மாதம், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், எழுத்து தேர்வு நடத்த முடியவில்லை.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்ததில், விண்ணப்பம் ஏற்கப்பட்ட, 8,800 நபர்களுக்கு, ஆகஸ்டில், எழுத்து தேர்வு நடத்த, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.இதற்கான, தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக, கல்லுாரிகளின் நிர்வாகத்தினரிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு வாணிப கழக இணையதள அறிவிப்பில் இளநிலை உதவியாளர்களுக்கான சிறப்புத்தேர்வுவிற்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டது. அதன்படி, பாடத்திடங்களாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், தமிழ்நாடு மதுபானம்(மொத்த விற்பனையில் வழங்கல்), மதுபான சில்லறை விற்பனை(கடைகள் மற்றும் மதுக்கூடங்களில்), பகுப்பாய்வு புரிந்துணர்தல், பரிமான நுண் அறிவு, மொழி அறியும் திறன்/புரிந்துகொள்ளும் திறன், பொது அறிவு ஆகிய பாடத்திட்டங்களின் மூலம் கொள்குறி வினாக்கள் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது.
தற்போது மேற்கண்ட பாடத்திட்டங்கள் அடங்கிய விரிவான தேர்வு பாடத்திட்டம் டாஸ்மாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இளநிலை உதவியாளருக்கான சிறப்பு தேர்விற்கான பாடத்திட்ட விவரத்தினை அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவிப்பதுடன் அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் வரும் 8ம் தேதி விழிப்புணர்வு நடத்திட வேண்டும்.
தேர்வு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள விவரத்தினை தெரிவித்திடவும், மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தனியாக தேர்வு மையம், தேர்வு கூட நுழைவுச்சீட்டு தனியாக அனுப்பப்படும் என்ற விவரத்தினை தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழிப்புணர்வு கூட்டம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து அனைத்து மண்டல மேலாளர்களும் அறிக்கை அனுப்பிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tasmac Assistant Exam Syllabus -Download Here
