தமிழக மின்வாரிய தேர்வு தமிழில் நடத்த மனு
TANGEDCO Recruitment 2020
மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கில் மின்வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளார்.மதுரையைச் சேர்ந்த சாந்தி, உள்ளீட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,” தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற்காக விண்ணப்பித்துள்ளோம். மின்வாரிய பணிக்கு ஆன்லைனில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முன்பு கேள்விகளும், அதற்கான பதில்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் ஆன்லைன் தேர்வில் வினாக்களும், அதற்கான பதில்களும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தமிழ் தொடர்பான கேள்விகள் மட்டுமே தமிழில் இருக்கும் என அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகளும், பதில்களும் இருப்பதால் அதை புரிந்து பதிலளிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் கிராமப்புறங்களை சேர்ந்த போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே மின்வாரிய அறிவிப்பாணையில் ஆன்லைன் வினாக்கள் மற்றும் பதில்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் என்ற பிரிவை செல்லாது என அறிவித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர், மேலாண்மை இயக்குனர், தலைமை பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 27-க்கு ஒத்திவைத்தார்.
மின்வாரியத்தில் ஆங்கில தேர்வு
