காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு
TNUSRB SI Result
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 969 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.இதில் காவல் பணியில் இருந்துக் கொண்டு இத் தேர்வை எழுதுவதற்கு 17,561 பேரும், பொதுப் பிரிவில்1,42,448 பேரும் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு மாநிலம் முழுவதும் 32 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12,13ஆம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது.இதில் எழுத்துத் தேர்வு பெற்றவர்களின் விவரங்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளரப் தேர்வுக் குழுமத்தின் http://www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தின் வெளியிடப்பட்டது.
எழுத்துத் தேர்வு முடிவுகளின் படி, முதல் 10 இடங்களை பெற்றவர்கள் மதுரவாயல் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்த தரவரிசை கொண்ட 100-பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. தேர்வு முடிவில் குளறுபடியா? அல்லது தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக பரவலாக தேர்வர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
ஏற்கனவே, டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் -2 ஏ, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, காவல் உதவி ஆய்வாளர் தேர்விலும் குளறுபடி இருக்கலாம் என்று எழுப்பப்படும் சந்தேகங்கள் தேர்வர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.


