TNPSC Group 1 Case 24 Questions Wrong -Latest News
குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் உத்தேச விடைப்பட்டியலில் 24 விடைகளில் தவறு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒப்புக் கொண்டது குறித்து இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு முடிந்த பிறகு, தேர்வாணயம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில், 96 கேள்விகளுக்கு தவறான பதில்கள் இடம்பெற்றதாக 4,390 புகார் மனுக்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 கேள்விகளில் வினாக்களே தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி அளித்த அறிக்கையின்படி தவறான கேள்விகளுக்கு தலா 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது என்றும் டிஎன்பிஎஸ்சி பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு ஜூன் 19க்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எஸ்.விக்னேஷ் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.
தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரியும் நானும் இந்தத் தேர்வை எழுதினேன். தேர்வின் உத்தேச விடைப்பட்டியல் தேர்வு முடிந்த சில நாள்களில் வெளியிடப்பட்டது. அதில் கேட்கப்பட்டிருந்த 200 கேள்விகளில் 18 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக இருந்தன. நான் உள்பட பலரும் அந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிடக் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாத தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகளை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்டது. மேலும், வரும் ஜூலை மாதம் குரூப்-1 பிரதான தேர்வை நடத்தவுள்ளது.
எங்களது கோரிக்கையை ஏற்று திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட்டிருந்தால், 175.5 மதிப்பெண்கள் பெற்ற எனக்கு 195 மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.
எனவே, முதல்நிலைத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை குரூப்-1 பிரதானத் தேர்வை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.எஸ்.மாதவன், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு விடைப் பட்டியலில் 18 கேள்விகளுக்கான பதில்களில் தவறு இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினோம்.
தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக நிபுணர்கள் குழுவை அமைத்து, சரியான பதில்களை கண்டறிந்து திருத்தப்பட்ட விடைப் பட்டியலை வெளியிட வேண்டும். ஆனால், தேர்வாணையம் மனுதாரரின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன என்று தெரிவித்தார்.
அப்போது தேர்வாணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.தியாகராஜன், தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகளுக்கான விடைகளில் தவறு உள்ளது. எனவே, அதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் தேவை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.