நவம்பர் 1ல் போலீஸ் உடல் தகுதி தேர்வு
போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 46 ஆயிரத்து, 700 பேருக்கு, நவம்பர், 1ல் உடல் தகுதி தேர்வு நடத்த, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் முடிவு செய்து உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், போலீஸ், சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாகவுள்ள, இரண்டாம் நிலை காவலர்கள், 8,888 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்டில் எழுத்து தேர்வை நடத்தியது. தேர்வில், 2.50 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், 46 ஆயிரத்து, 700 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வை நவ., 1ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடத்த, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 16 மாவட்டங்களில் உள்ள, ஆயுதப்படை மைதானங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்; தேர்வு உபகரணங்களை தயார்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, போலீஸ் பயிற்சி பள்ளி, டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:வரும், 27ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், அதற்கு பின், பயிற்சியை துவங்க உத்தரவிடப் பட்டுள்ளது.
அதன்படி, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு கடிதம், அந்தந்த மாவட்ட, எஸ்.பி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் வாயிலாக, 25ம் தேதிக்குள் அனுப்பப்படும். நவ., 1ல், உடல் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.