சாகித்ய அகாடமி விருதுகள்
சாகித்திய அகாடமி இந்தாண்டுக்கான சிறுவர் இலக்கியத்துக்கான பால சாகித்ய விருது சிறுவர் எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் படைப்பாளிகளுக்கான யுவ புரஸ்கார் கவிஞர் ப.காளிமுத்துவுக்கு ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இமையம் ஆங்கில நூலுக்குக் கூட்டம்
எழுத்தாளர் இமையத்தின் ‘If There is a God’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்து சென்னை சர்வதேச மையம் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைக்கவுள்ளது. இன்று (27, ஆகஸ்ட்) மாலை 6 மணிக்கு கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்துக்குப் பின்னால் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் பிரபா ஸ்ரீதேவன், ஆவணப் பட இயக்குநர் ப்ரஸன்னா ராமசாமி, பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத், நடிகர்கள் சர்வேஷ் ஸ்ரீதர், ஜானகி சுரேஷ், நிகிலா கேசவன் ஆகியோருடன் இமையமும் கலந்துகொள்கிறார்.
விஜயா வாசகர் வட்ட விருதுகள்
விஜயா பதிப்பக வாசகர் வட்ட மொழிபெயர்ப்பாளர் கே.சுப்பிரமணியம் நினைவு விருது ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா, கன்னடத் – தமிழ் மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி ஆகியோருக்கு நாளை (28, ஆகஸ்ட்) காலை 10 மணிக்கு கோவை பூ.சா.கோ. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.
ஒரு லட்சம் பிரதிகள்
அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார் எழுதிய ‘ஆரோக்கியத்தின் காவலன் எண்ணெய்க் குளியல் – அறியப்படாத தகவல்கள்’ என்னும் தலைப்பில் நன்செய்ப் பதிப்பகம் ரூ.10க்கு ஒரு நூலை வெளியிட்டுள்ளது. மருத்துவக் குறுநூல் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை வாங்க, 9566331195 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சடிக்கப்பட்டுள்ளது. நன்செய் பதிப்பகம் 10 ரூபாய்க்கு வெளியிட்ட பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு லட்சம் பிரதிகள் விற்றது.
நரனின் ‘குமாரத்தி’
எழுத்தாளர் நரன் ‘குமாரத்தி’ என்னும் புதிய நாவலை எழுதி முடித்திருக்கிறார். ‘கேசம்’, ‘சரீரம்’ சிறுகதைத் தொகுப்புகள் மூலம் கவனம் பெற்ற நரனின் இந்தப் புதிய நாவலில் இயேசு கிறிஸ்து ஒரு கதாபாத்திரமாக வருகிறார்.
நரனின் சிறுகதை ஒன்றை இயக்குநர் ராம், திரைப்படமாக இயக்கும் முயற்சியில் அதற்குத் திரைக்கதை எழுதி முடித்திருக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா நரனின் காதல் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை ஓவியக் கண்காட்சி
ஓவியங்களின் வழி சென்னையின் பாரம்பரியம் என்ற தலைப்பில் சென்னை குறித்த பாலச்சந்தர், யூசூஃப் மதியா ஆகியோரின் ஓவியக் கண்காட்சி இம்மாதம் 14இல் தொடங்கி சென்னை தட்சிண்சித்ராவில் நடந்து வருகிறது. இம்மாதம் 30இல் முடியவிருக்கிறது. தொடர்புக்கு: 90807 21706
அம்பரம் நாவலுக்கு சிங்கப்பூர் அரசு விருது
எழுத்தாளர் ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவலுக்கு சிங்கப்பூர் அரசின் தேசியக் கலை இலக்கியக் கழகத்தின் சிறந்த புனைவுக்கான விருது கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேந்த இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திய சிங்கப்பூர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலை சென்னையைச் சேர்ந்த மேக்லி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.