பூனா ஒப்பந்தம்-1932 செப்டம்பர் 24
தலித்துகள், தங்களது பிரதிநிதிகளைத் தாங்களே தேர்வு செய்யும் வகையில், அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனித்தொகுதி உள்ளிட்ட கோரிக்கைகளை அம்பேத்கர் முன்வைத்திருந்தார்.
அம்பேத்கரின் கோரிக்கைகளை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி, தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில், பிறசாதியினர் வாக்களிக்க முடியாது என்ற சூழல் ஏற்படும். இதற்கு காந்தி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். “இந்து சமுதாயத்துக்குள் இந்த முடிவு பிளவை ஏற்படுத்திவிடும்” என்று அவர் கருதினார்.
ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, பிரிட்டிஷ் அரசு கைதுசெய்து புனேவுக்கு (அப்போதைய பூனா) அருகில் உள்ள எரவாடாவில் சிறைவைத்தது.
தலித் மக்களுக்குத் தனித்தொகுதி வழங்கும் பிரிட்டிஷ் அரசின் முடிவுக்கு எதிராக, சிறையில் இருந்தபடியே, 1932 செப்டம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரத்தைத் தொடங்கினார். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவானது. தலித் மக்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் அபாயமும் ஏற்பட்டது.
எனவே, தனித்தொகுதி கோரிக்கையைக் கை விடுமாறு மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அம்பேத்கரிடம் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து, தனது கோரிக் கையை அம்பேத்கர் கைவிட்டார். காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் பூனா ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, காந்தி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.